யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கூடைப்பந்தாட்ட திருவிழா

யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கூடைப்பந்தாட்ட திருவிழா

உலக பக்கவாத தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக யாழ்ப்பாணத்தில் கூடைப்பந்தாட்ட திருவிழா ஒன்று நடைபெறவுள்ளது.

வடமாகாண பக்கவாத விழிப்புணர்வு குழுவும் ஸ்புட்னிக் விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

அந்த வகையில் இந்த கூடைப்பந்தாட்ட திருவிழாவானது மகளிர் கூடைப்பந்தாட்ட திருவிழா மற்றும் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட திருவிழா என இரு பிரிவுகளில் யாழ் – பழைய பூங்கா வீதியிலுள்ள ஜே.டி.பி.ஏ திடலில் நடைபெறவுள்ளது.
மகளிர் கூடைப்பந்தாட்ட திருவிழாவானது நாளை (28) பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட திருவிழா நாளை மறுதினம் (29) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மகளிர் கூடைப்பந்தாட்ட திருவிழாவின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உயிர் வேதியல் தலைவர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும், சிறப்பு விருந்தினராக மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பி.வாகீசன ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட திருவிழாவின் பிரதம விருந்தினராக யாழ். போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக சமுதாய மற்றும் குடும்ப மருத்துவ துறை தலைவர் வைத்தியர் பேதுருப்பிள்ளை அமல் டினேஸ் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த கூடைப்பந்தாட்ட திருவிழாவிற்கு விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் அழைத்து நிற்கின்றனர்.