நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி : விவசாயிகள் பாதிப்பு

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி : விவசாயிகள் பாதிப்பு

நுவரெலியாவில் அண்மைக்காலமாக நிலவிய மரக்கறிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் இன்று (04) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மரக்கறி வகைகளின் தொகை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில். நுவரெலியாவில் அதிகமானோர் விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர்.

இதனால் இம்முறை கரட், லீக்ஸ் போன்ற மரக்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இதே ஐந்து மாதங்களுக்கு முன்பு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் துரிதமாக அதிகரித்து ஒரு கிலோ கரட் 1800 ரூபாய்க்கு கொள்வனவு செய்து 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 70 ரூபாய் தொடக்கம் 80 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது கரட் உற்பத்தி அதிகமாகியிருப்பதாலும் சந்தையில் கரட்டின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறி வகைகளில் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் கிருமி நாசினிகள், நாளாந்த கூலி, பசளை உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாததால் நாளாந்தம் ஏற்படுகின்ற செலவினை கூட தம்மால் பெற முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.