வாக்களிக்க செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாக்களிக்க செல்லும் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

குடிமக்கள் வாக்களிக்க வரும் போது நிதானமாக இருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கான அறிவித்தல் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வாக்காளர்கள் வாக்களிக்க நிலையங்களுக்கு வரும் போது தவிர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் மது அருந்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல், முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்களை பார்த்திருக்கின்றோம். இதனால் ஏனைய வாக்காளர்களுக்கும் அவர்களால் இடையூறு ஏற்படலாம். எனவே வாக்களிக்க வரும் போது நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு குடிமக்களுக்கு உண்டு.

மேலும், சிலர் கூரிய ஆயுதங்கள், சிறு கத்திகள் உள்ளிட்டவற்றை வாக்குச்சாவடிக்குள் எடுத்து வருவதையும் நாங்கள் அவதானித்திருக்கின்றோம். ஒருவேளை, அவ்வாறு வருபவர்கள் தங்களது தொழிலின் நிமித்தம், தொழிலுக்கு செல்லும் வழியில் வாக்களிக்க வந்திருக்கலாம். எனினும், இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான சிறு தவறுகளால் வாக்குச்சாவடியில் குழுப்ப நிலை தோன்றினால், அது முழு வாக்குப் பதிவு செயல்முறையையும் தடுக்கக் கூடிய அபாயம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.