விவசாயிகளுக்கு ஜனாதிபதியின் பெரும் மகிழ்ச்சியான செய்தி

பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு உரமானியத்தை ஹெக்டேயருக்கு 15,000 ரூபாவிலிருந்து 25000 ரூபா வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த சலுகையானது, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுவரை ஹெக்டேயருக்கு வழங்கப்பட்ட 15 ஆயிரம் ரூபா உர மானியம் ரூ.25,000 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு, விவசாயிகளுக்கு இந்த மானியத்தை செயற்திறனுடனும் திறம்படவும் கிடைக்கும் வகையில் குறித்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியான விவசாய இடுபொருள் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் நியாயமான விலையில் உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வழங்குவதற்கும் சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு ஏற்ப இரசாயனம் மற்றும் சேதனப் பசளை உள்ளிட்ட விவசாய இடுபொருட்களுக்கு மானியம் வழங்குவதற்கும் புதிய அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்னடைவை சந்தித்துள்ள மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, ஆழ்கடல் மற்றும் நாளாந்த படகுகளுக்கு மாதாந்த அடிப்படையில் எரிபொருள் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் மீனவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்படும்.